நீப்பத்துறை சென்னம்மாள் கோவில் வரலாறு | Neepathurai Chennamma Kovil History in Tamil
அனைவருக்கும் வணக்கம். இன்று நாம் காண இருக்கும் பதிவு நீப்பத்துறை சென்னம்மாள் (சென்னியம்மன்) கோவில் வரலாறு பற்றியதுதான்
நீப்பத்துறை சென்னம்மாள் கோவில்
ஓட்டம் குறையாமல் ஓடிக் கொண்டிருக்கும் தென்பெண்ணை ஆற்றின் நடுவில் ஆலயம் அமைந்திருக்கும். ஆலயத்தின் நடுவில் அம்மன் கல்வடிவில் அமைந்துள்ளார். கல் வடிவில் இருக்கும் அம்மனுக்கு உருவமே கிடையாது அதுதான் ஆலயத்தின் சிறப்பு. மேலும் இந்த ஆலயத்திற்கு ஆடி மாதம் பக்தர்கள் வருகை தந்து இந்த ஆலயத்திற்கு சிறப்பு வழிபாடுகள் செய்து மனமுருகி வேண்டுகிறார்கள்.
நீப்பத்துறை சென்னம்மா வரலாறு
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகில் உள்ள மலைகளுக்கு நடுவே வரும் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள திருப்பாறையில் பார்வதி தேவி குழந்தையாக பிறந்து ஸ்ரீ சென்னம்மாள் என்ற பெயரில் வளர்ந்து ஜீவசமாதி அடைந்தார் மற்றும் ஜீவ சமாதியான வெள்ளையப்ப சித்தர், நவாப் ஆகியோரின் ஜீவ சமாதிகளும் உள்ளது.
வெள்ளையப்ப சித்தர் (சுருக்கமான அறிமுகம்)
நீப்பத்துறை கிராமத்திற்கு வெள்ளையப்ப சித்தர் என்ற சித்தர் வந்திருந்தார். ஒருநாள் பாம்பு கடித்து இறந்த சிறுவனை சுடுகாட்டிற்கு எடுத்துக்கொண்டு சென்றிருந்தார்கள். அப்பொழுது சிறுவனின் இறப்பின் காரணம் என்னவென்று சித்தர் கேட்க அதற்கு பொதுமக்கள் சிறுவன் இறப்பை காரணம் காட்டி கூற உடனே சித்தர் சவத்தை கீழே வையுங்கள் நீங்கள் ஒரு புறமாக நில்லுங்கள் என்று கூறிவிட்டு மறுபுற சித்தர் அமர்ந்து தியானம் செய்தார். கடித்த பாம்பு சிறுவனின் உடலுக்கு அருகில் வந்து விஷத்தை மீண்டும் எடுத்துச் செல்ல அந்த சிறுவன் உறங்கியவன் போல உயிர்பிழைத்து எழுந்தான். ஊர் மக்கள் சித்தரின் பாதங்களில் விழுந்து வணங்கினார்கள். ஊரின் வடக்கே ஒரு பெரிய கற்குன்றில் தன்னுடைய ஞானத்தால் அரை அடி ஆழத்திற்கு பாறையில் துளை போட வைத்து அதில் நல்லெண்ணெய் மூன்று முறை ஊற்றி, அதை பாம்பு கடித்தவருக்கு அளித்தார். இதை உண்ட அனைவரும் பிழைத்தனர் என்று இன்றும் ஆயிரக்கணக்கானோர் நம்பி பலனடைகிறார்கள்.
நவாப் (சுருக்கமான அறிமுகம்)
நவாப் என்னும் மன்னர் அந்த ஊர்களை ஆண்டு வந்தார். அந்த நேரத்தில் மன்னர் நவாப் பெண்களின் பிரியராகவே இருந்தார். திருமணமான பெண்களை திரும்பி கூட பார்க்க மாட்டார் ஆனால் கிராமங்களில் அழகான கன்னிப் பெண்கள் காணப்பட்டால் சேவகரின் மூலம் தன் ஆசையை தீர்த்து கொள்வார்.
நீப்பத்துறை சென்னம்மாள்
மன்னர் நவாப்பிடமிருந்து கன்னிப்பெண்களை காப்பாற்ற குழந்தையாக பார்வதி தேவி அவதரித்தார். பார்வதி பூலோகத்தில் ஜவ்வாது மலை என்ற பகுதியில் குழந்தையாக பிறந்தார். அந்த ஜவ்வாது மலை பகுதியில் சமுத்திரம் என்னும் சிற்றூரில் ஆடு மாடுகளை மேய்த்து வரும் ஒரு நபர் தங்கம் போன்ற மேனியில் இருக்கும் குழந்தையை பார்த்ததும் தன்னுடன் வீட்டிற்கு அழைத்து சென்றார். அன்றிலிருந்து புத்திர பாக்கியம் அற்ற கணவன் மனைவி இருவரும் குழந்தையை அன்புடன் வளர்க்கிறார்கள். குழந்தையின் ஐந்தாம் வயதில் காதணி விழா ஏற்பாடு செய்தார்கள். அந்த சமயம் ஒரு பிராமணர் அந்த வழியாக சென்றார், பெற்றோர்கள் அவரை அழைத்து குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்? என்று கேட்க அதற்கு அவர் சென்னம்மாள் என்ற பெயரை வையுங்கள் என்றார். இந்த பெயர் இந்த வையகம் உள்ளவரை நிலைக்கும் ஆனால் இந்த குழந்தை சுமார் 10 – 12 வயதுக்குள் இறந்து விடும் என்று பிராமணர் சொல்ல பெற்றோர்கள் மிகவும் வருந்தினர்.
நீப்பத்துறை சென்னம்மாள் வரலாறு
சென்னம்மாளுக்கு ஒன்பது அல்லது பத்து வயதான பின்பு வளர்த்தவர்களை பார்த்து உங்களுக்கு வயதாகி விட்டது மாடுகளை நான் மேய்த்து வருகிறேன் நீங்கள் போக வேண்டாம் என்று கூறினாள். இருப்பினும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தும் அச்சிறுமி மாடு மேய்க்க தனியாக செல்லும்பொழுது மாட்டை காட்டில் விட்டுவிட்டு அந்த சிறுமி தான் அவதரித்த இடத்தில் நாராயணனை அழைப்பார். நாராயணன் தோன்றுவார் பின்பு இருவரும் பேசிக் கொண்டிருப்பார்கள் மாலையில் அவர் சென்று விடுவார், சிறுமி மாடுகளை வீட்டுக்கு ஓட்டிக்கொண்டு வந்து விடுவாள். இதுபோன்று தினந்தோறும் இருவருமே உரையாடுவார்கள்.
திருமண பேச்சு: ஒரு நாள் வரி வசூலுக்கு நவாப் சமுத்திரம் என்னும் சிற்றூருக்கு சென்றார். அங்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்த சென்னம்மாளை பார்த்து ஈர்க்கப்பட்டார். அதைத்தொடர்ந்து தன் சேவகர்களிடம் வசீகரமான கூந்தல் மற்றும் தங்கம் போன்ற மேனி உடைய சிறுமியை மாலை நேரத்தில் அழைத்து வரச் சொன்னார். சேவகர்கள் வளர்ப்பு பெற்றோர்களிடம் நடந்ததை கூறினார்கள். அவ்விடத்திற்கு வந்த சென்னம்மாள் ஒரு நாள் இன்பத்தில் பயனில்லை எனவே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டார். அதற்கு நவாப்பும் ஒப்புக்கொண்டார். சிறுமி சென்னம்மாள் வரும் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு மணக்கோலத்தில் வருவதாக சொன்னார். பின்பு மாடு மேய்ப்பதற்காக காட்டிற்கு சென்றபோது தன் அண்ணன் நாராயணனிடம் நடந்ததை கூறி தீர்வு கேட்டார். அதற்கு நாராயணன் சிறுமியின் அளவிற்கு ஒரு பெட்டியை அவரின் வளர்ப்பு பெற்றோர்களிடம் செய்து கொடுக்க சொன்னார்.
வெள்ளிக்கிழமை நிகழ்வு: திருமணம் நடைபெற இருந்த வெள்ளிக்கிழமை அன்று காலை 5 மணிக்கு சென்னம்மாள் சமுத்திரத்திற்கு செல்லாமல் மாற்று வழியாக வெங்கட்ராமன் கோவிலுக்கு சென்றார். இதை அறிந்து கொண்ட நவாப் தன் படையுடன் சிறுமியை தேடி கிளம்பினார். மன்னர் வருவதை அறிந்து கொண்ட நாராயணன் சிறுமியை பெட்டிக்குள் அமர வைத்து நதியில் அனுப்பிவிட்டார் அதை கவனித்த நவாபின் படை பின் சென்ற போது ஆற்றின் நடுவில் ஏழு கன்னியர்களால் ஒரு பள்ளம் உருவானது, சுமார் 5000 அடி நீளமும் 300 அடி ஆழமும் 150 அடி அகலமும் கொண்டது. சிவபெருமானின் தீவிர பக்தரான வெள்ளையப்ப சித்தரிடம் சிவபெருமான் பார்வதி தேவி தான் சென்னம்மாள் என்னும் சிறுமி மற்றும் அவரை வளர்த்த பெற்றோர்கள் தான் கரையோரம் கண்ணீருடன் இருக்கிறார்கள், அவர்களுக்கு உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் நீ இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். வெள்ளையப்பசித்தர் சென்னம்மாவை காப்பாற்றி பாதுகாத்து வளர்க்கிறார். ஆனால் வளர்த்த பெற்றோர்கள் தன்மகள் இறந்து விட்டதாக எண்ணி அந்த ஆற்றிலேயே இறுதி சடங்கினை செய்தனர்.
நவாபின் மனமாற்றம்: நவாப் தனது வீடு வாசல் இழந்து தன் படைகளையும் இழந்து நிற்கதியாக நின்றார். அப்போது வெள்ளையப்ப சித்தர் தன் ஞானத்தால் நவாபை சிற்றின்ப ஆசையிலிருந்து விடுவித்தார். தன் தவறை உணர்ந்த நவாப் சித்தரிடமே பணிவிடை செய்வதாக சொன்னார்.
சாபம் பெற்ற ஊர்: ஆக சென்னம்மாள், வெள்ளையப்ப சித்தர், நவாப் ஆகிய மூவரும் ஒன்றாக வாழ்ந்தனர். அதைக் கண்டு மக்கள் ஏளனமாக பேச கோபம் கொண்ட வெள்ளையப்ப சித்தர் அந்த ஊருக்கு சாபம் கொடுத்தார். அதாவது ஆதி இல்லா அம்மாபேட்டை! நீதியில்லா நீப்பத்துறை! கோல் சொல்லும் கொட்டாவூர்! என்றும் இந்த ஊர் மக்கள் யாருமே முன்னுக்கு வர முடியாது என்றும் சாபம் அளித்தார். மக்கள் துன்புற்றனர்.
நீப்பத்துறை சென்னம்மாள் வரலாறு
வெள்ளையப்ப சித்தர் இருவரிடமும் ஜீவசமாதி அடைய வேண்டும் என்றார். வெள்ளையப்ப சித்தர் சென்னம்மாளை ஆற்றில் பாறைக்கு நடுவில் ஜீவசமாதி அடையுமாறும் பிற்காலத்தில் கோவில் கட்டி சென்னம்மாளை வழிபடுவார்கள் என்றும் கூறினார். நவாபை ஊருக்கு வடக்கே ஆலமரத்தடியில் ஜீவசமாதி அடைய வேண்டும் என்று கூறினார். அதற்கு மேல் ஒரு ஆலுடையார் ஆலயத்தில் பக்தர்கள் கிடாவெட்டி செல்வார்கள் என்று கூறினார். பல ஆண்டுகளுக்குப் பிறகு என் ஜீவ சமாதியின் மேல் ஒரு கோவில் கட்டப்படும் அதற்கு மூலவர் கல் சிலை வைக்க மாட்டார்கள் உற்சவம் மூர்த்தி சிலைகளை மட்டும் வைப்பார்கள் என்று வெள்ளையப்ப சித்தர் கூறினார்.
இந்த மூன்று ஆலயங்களில் முறைப்படி வணங்குபவர்களுக்கு மூன்று தெய்வங்களின் அருள் கிடைக்கும். இன்றும் தொடர்ந்து வழிபாடு செய்து வரும் பக்தர்களுக்கு கலையாத கல்வியும் , குறையாத வயதும் , ஒரு கபடுவாறாத நட்பும் , குன்றாத இளமையும் , கழுவி இல்லாத உடலும், தவறாத சந்தானமும் , தடைகள் வராத குடையும் , தொலையாத நிதியமும், ஒரு துன்பமில்லாத வாழ்வும் கிடைக்கிறது. நீங்களும் நீப்பத்துறையில் உள்ள மூன்று ஆலயங்களுக்கும் சென்று பயனடையுங்கள். நன்றி.
இந்த கட்டுரையை வழங்கிய மிருதுளா அவர்களுக்கு தட்ஸ்தமிழ் சார்பாக நன்றி.
இதையும் படிக்கலாமே,
தினமும் யோகா செய்வதால் நம் உடலில் ஏற்படும் நன்மைகள் | Yoga Benefits in Tamil |